Author: ஜெயகாந்தன்
•08:20
Share
ஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்றகிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாலகுமாரன். பள்ளி இறுதி வகுப்புவரை தேறிய பாலகுமாரன், சுருக்கெழுத்தாளராக வாழ்கையைத் தொடங்கி, பிறகு பிரபல டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பதவி வகித்தவர். எழுபதுகளின் துவக்கத்தில் வெகுஜனத் தன்மையோடு கவிதைகள் எழுதத் துவங்கிய இவர், வெகுஜன சிறுகதைகள் எழுதுவதில் மடைமாறி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். எண்பதுகளில் தமிழ் வெகுஜன நாவல் எழுத்தானது, ஒருதரமற்ற- தட்டையான- உள்ளீடற்ற குற்றக் கதைகளின் வணிக எழுத்தாக மலிலிந்துகிடந்த நேரத்தில், எல்லாருக்குமான எளிய உளவியல் பார்வை கொண்ட நூற்றுக்கும்மேற்பட்ட சமூக, குடும்பக் கதைகளை மிகுபுனைவு நாவல் களாக எழுதி,சுஜாதாவுக்கு இணையாக தமிழ் வெகுஜன வாசகர் பரப்பின் ரசனையை ஒருபடி மேம்படச் செய்தவர் பாலகுமாரன். இவரது எழுத்துக்கள் தமிழ் வெகுஜன வாசகனை நவீன வாசிப்புக்குக் கொண்டு வந்து சேர்த்த படிக்கட்டுகள் என்ற மதிப்பீடு தீவிரவாசகர்கள் மத்தியில் உண்டு.
இவரது எழுத்துக்களில் "மெர்குரிப் பூக்கள்' 1980- ஆம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.
வெகுஜன எழுத்தில் இயங்கிக்கொண்டே தமிழ் சினிமாவில் இயக்குனர் கே. பாலச்சந்தர் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பாலகுமாரன், தமிழ் வெகுஜன திரைப்படங்களுக்கு வெற்றிகரமான உரையாடல் எழுத்தாளராகவும் இன்றளவும் இயங்கி வருபவர். ஒரு கட்டத்தில் குடும்ப, சமூக எழுத்திலிருந்து பெரும்பான்மையாக விடுபட்டு, இந்து மதத்தின் அடிப்படையாக விளங்கும் புராண, இதிகாச தொன்மங்கள், பாத்திரங்கள், சனாதன தத்துவங்கள் ஆகியவற்றை எளிமை செய்து வெகுஜன ஆன்மிக எழுத்தாக எழுத ஆரம்பித்த தாலும், திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த யோகி ராம்சுரத்குமாரின் சீடராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு ஆன்மிக வாழ்வு வாழ யத்தனிப்பதாலும் இப்போது எழுத்துச் சித்தர் பாலகுமாரன் என்ற அடைமொழி யோடு அழைக்கப்பட்டு வருகிறார்.
தற்போது சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் பாலகுமாரன், வெகுஜனத்தளத்தில் இயங்கியபடியே பத்தாம் நூற்றாண்டின் பொற்காலத் தஞ்சையை சிருஷ்டித்த மாமன்னன் ராஜ ராஜனை கதை நாயகனாக முன்னிறுத்தி, சில பல வரலாற்றுத் தரவுகள், கல்வெட்டு ஆதாரங்களின் துணைகொண்டு று பாகங்களாக இவர்எழுதியிருக்கும் "உடையார்'' இவரது எழுத்தில் முதல் முழு நீள, வரலாற்று மிகு புனைவு நாவலாக வெளிவந்து தமிழ் வெகுஜன வாசகர்களை கவர்ந்த அதே நேரம், தீவிர வாசகர்களையும் ஈர்த்திருக்கிறது.

2007-ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பாலகுமாரன், வெகுஜன எழுத்துப் பரப்பில் இன்றும் வசீகரமான எழுத்தாளராகத் தம்மைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். "இனிய உதயம்' நேர்காணலுக்காக தனது எழுத்துப் பயணத்தின் நினைவுகளில் பின்னோக்கிப் பயணித்தார் பாலகுமாரன். . .
உங்களுடைய எழுத்துப் பயணம் உங்களுக்கு நிறைவைத் தந்திருக்கிறதா?
""நிச்சயமாக! மிகுந்த நிறைவை என் மனம் உணர்கிறது. நான் என்ன எழுத வேண்டும்என்று நினைத்தேனோ அதை மிகச் செவ்வனே எழுதியிருக்கிறேன். சில சமயம் என் எழுத்துக்கள் நான் நினைத் ததையும்விட மிக அழகாக என்னிலிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன. இது என் எழுத்தை நான் படிப்பதால் ஏற்படும் திருப்தி மட்டுமல்ல. என் எழுத்தைப் படித்த வாசகர்கள், என்னிடம் எதிரொலிப்பதால் ஏற்பட்ட சந்துஷ்டியும்கூட.
என்னுடைய எழுத்தை ஆரம்ப காலத்திலிருந்து படித்து, என்னுடனே வளர்ந்து, என்பரிணாம வளர்ச்சிபோல அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, என்னுடைய எழுத்துக்களைத் தங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்திக் கொண்டு வளர்ந்து,பலம் பெற்ற வாசகர்கள் பலர். இதை நேரடியாகவும் கடிதம் மூலமும் பல நூறுமுறைகள் கேட்டும் படித்தும் சந்தோஷப் பட்டிருக்கிறேன்.
"உங்களால் என் வாழ்க்கை செம்மை ஆயிற்று. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உதறிவிட்டு நான் வாழ்கிறேன். என்னுடைய குடும்பம் இன்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு, எனக்கு குடும்பம் என்று ஒன்று இருப்பதற்குஉங்கள் எழுத்துதான் காரணம்' என்றெல்லாம் என்னைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஒரு படி மேலே போய் தன் குழந்தைக்கு பாலா என்று பெயரிட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது என்னைச் சந்தித்தாலும் கை கூப்பி மிகப்பரவசமாக வணங்குகிறார்கள். எத்தனை எழுத்தாளர் களுக்கு இது கிடைத்தது என்ற விவரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் "உங்கள் எழுத்து எனக்கு, என்வாழ்க்கைக்கு உதவி செய்தது' என்ற பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் என்னிடம் இருப்பதை நான் உணருகிறேன். ''
ஆனால் உங்கள் எழுத்தை விமர்சிக்கிற வாசகர்களும் நிறைய இருக்கிறார்களே?
""இருப்பதுதானே இயற்கை. வலது என ஒன்று இருந்தால் இடது என ஒன்று இருக்கத்தானே செய்யும். மேலே ஒன்று இருந்தால் கீழே ஒன்று இருக்கும். என்னுடைய எழுத்தை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு அல்லது வேறு எவரேனும் படிக்கக் கேள்விப் பட்டு அதைத் தான் படித்ததாய் நினைத்துக் கொண்டு பாலகுமாரன் இப்படி எழுதுகிறார், அப்படி எழுதுகிறார் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.
நம்முடைய தமிழ் இலக்கிய உலகில் விமர்சிப்பதற்கு முன்னால் படிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சரியானபடி படித்துவிட்டு விமர்சனம் செய்கிற ஒரு பாங்கு வளரவே இல்லை. இங்கே முதலில் தனிப்பட்ட கருத்தைத்தான் விமர்சனம் என்கிறார்கள். விமர்சனக் கலை என்பது தமிழில் இல்லவே இல்லை. அப்படி சிலர்ஆரம்பித்தபோதும் அது அடாவடித்தனத்தில்தான் முடிந்தது. உண்மையாக இல்லை. விமர்சனம் இல்லாது போயினும், நல்ல வாசகர்கள் தமிழில் இருக்கிறார்கள். புத்தகத் திருவிழாவில் புத்தகம் விற்பதும், அடிக்கடி புத்தகத் திருவிழாநடப்பதும் நல்ல வாசகர் எண்ணிக்கை வளர்வதும் தான் இன்றைய தேவை. விமர்சனம்இங்கே நொறுக்குத்தீனி. வாய் மெல்லப் பயன்படும் அதுவே அறுசுவை விருந்தல்ல. நுனிப்புல் மேய்கிறவர்கள் விமர்சிக்கத் தகுதியற்றவர்கள். ''
ஆரம்பத்தில் பாலியல் கண்ணோட்டத்தோடு நீங்கள் எழுதினீர்கள். இப்பொழுது தலைகீழ் பிறழ்வாக ஆன்மிகக் கண்ணோட்டத்துடன் எழுதுகிறீகள் என்ற குற்றச்சாட்டை இதே வாசகர்கள் முன்பு முன்வைத்தார்களே . . .
""நான் நுனிப்புல் மேய்பவர்கள் என்று சொன்னது இவர்களைப் பற்றித்தான். பாலிலியல் பற்றி நான் மிகக் குறைந்த அளவில்தான் எழுதி யிருக்கிறேன். பாலியல் வாழ்க்கையில் மிக ஆதாரமான விஷயம். நிறைய பேரின் திருமண வாழ்க்கை இங்கு குப்பைத் தொட்டியாய்ப் போனதற்குக் காரணம் பாலியல் விஷயங்களை சரியாகப் புரிந்து கொள்ளாததும், பெண்களை அன்பாக அணுகாததும்தான். ஆண் என்ற மமதை, அலட்சியம் அல்லது ஆணாதிக்கம் என்று எகிறுகின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமானதும் காரணம். இந்தப் பாலிலியல் குளறுபடிகள் வாழ்க்கையில் இருப்பதை நான் கண்டபிறகு எப்படி இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை செய்து இது தொடர்பாக வெகு சில கதைகளே எழுதியிருக்கிறேன். ஒட்டு மொத்தமாக வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை- வேலை, வருமானம்,குழந்தைகள், தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பர்கள் என்றெல்லாம் நகர்ந்து, அதிலே பெண்களுடைய பங்கும், ஆண்களுடைய பங்கும் காமத்தினுடையபங்கும் என்னவென்று யோசித்து எழுதியிருக்கிறேன். வெறும் பாலியலோ வக்கிரமான பாலிலியலோ நான் எழுதியதில்லை. பாலியல் விஷயத்தில் தவறானஅணுகுமுறை முகத்தில் அடித்து வீழ்த்தும் என்பதை சொல்லுவதற்காக சில கதைகள்எழுதியிருக்கிறேன்.
பாலியல் மட்டுமே எழுதியிருக்கிறேன் என்ற பார்வை வக்கிரமான பார்வை. அப்பா-அம்மா கதைதானே எழுதியிருக்கிறாய் என்று நினைத்துக் கொள்வது படிப்பின்மை; படித்தது பற்றிய தெளிவின்மை. இவர் கள்தான் நுனிப்புல் மேய்ந்து விட்டு, மேலாகப் படித்து விட்டு, என் எழுத்தைச் சரியாக அணுகாமல்புறம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் எவரையாவது குறை சொல்லிக்கொண்டிருப்பது சிலருடைய வாழ்க்கை. இவர்கள் தானும் உருப்படியாகச் செய்ததில்லை. மற்றவர் உருப்படியாகச் செய்ததையும் புரிந்து கொண்டதில்லை. என்னுடைய பரிணாம வளர்ச்சி என்னவோ அதைத்தான் என் கதைகள் வெளிப்படுத்துகின்றன. ''
பெண்மையை ஒரு போகப்பொருளாகச் சித்தரித்தீர்கள் என்ற குற்றச்சாட்டையும் மறுக்கிறீர்களா?
""இது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு! இருபது வயதில், இருபத்தைந்துவயதில், பெண்மை ஒரு பிரமிப்பாகவும் மிக அவசிய மானதாகவும் இருந்தது. இதுமெல்ல மெல்ல மாறி, பல்வேறு விதமான உருவகம் எடுத்து, குழந்தைகளோடு கூடிய ஒரு தாய்- அவள்தான் மனைவி என்ற அழகும் சேர்ந்தது. தமிழ்நாட்டில் பாலியல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயம்- பெண்களை போகப் பொருளாகக் கருதப்பட்ட விஷயம். இதை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் மிகச் சில கதைகள் எழுதியிருக்கிறேனே தவிர, என் எழுத்துகளில் பலவும் பல்வேறு விதமான கோணங்களைக் கொண்டவை. தன்னைத் தேடுபவை. ஆத்ம விசாரம் கொண்டவை. தனிமையை ரசிப்பவை. மற்றவர்களுக்கு எளிதில் உண்மையாக விட்டுக் கொடுப்பவை. போலித்தனத்தைச் சாடுபவை. சத்தியமாக வாழ்க்கையில் இருக்கின்ற சந்தோஷத்தை இனம் காட்டுபவை. இதைப் புரிந்து கொண்டு, இதை நன்றாக என் கதைகள் மூலம்அறிந்து கொண்டு, தனக்குள் விவாதித்து தெளிவு பெற்றுத் தேர்ந்த வாசகர்கள்எனக்கு மிக அதிகம். அதனாலேயே நான் கொண்டாடப்படுகிறேன். அதனாலேயே பலர்பொறாமைக்கும் ஆளாகியிருக்கிறேன். பெண்ணுக்கு இன்றைய தேவை முதலில் பொருளாதார விடுதலை என்று கதைகளில் தொடந்து எழுதியவன், எழுதி வருபவன் நான். என்மீதா இந்த குற்றச்சாட்டு?''
பெண்களுக்கு பொருளாதார விடுதலையே முதல் தேவை என்று சொல்கிறீர்கள். ஆனால்பொருளாதார விடுதலை கிடைத்த பெண்களில் பலரும் கருத்து ரீதியாக, உளவியல்ரீதியாகப் பின்தங்கியிருக்கிறார்களே? பெண் விடுதலை, பெண் சுதந்திரம்பற்றிப் பேசுகிற பெண்களில் பலரும்கூட ஸ்டீரியோ டைப் பெண்ணியக் கருத்தோட்டம் கொண்டவர்களாக அல்லவா இருக்கிறார்கள். பெண்களைப் பற்றி அதிகம் எழுதி வரும் உங்களது பார்வையில் பெண் விடுதலை என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
""கொடுத்துப் பெறுவதல்ல பெண் சுதந்திரம். அடித்துப் பிடுங்கப் படுவது. பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்று கேட்பீர்களாயின், அதைநோக்கி அவர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள்; ஒரு போர்முனையில் வெகு வேகமாகத் தங்களுடைய சுதந்திரம் குறித்து யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இன்றைய பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சுதந்திரம் என்பது என்ன? ஆண்- பெண் உறவு முறைகளில் யார் உயர்ந்தவர்கள், யார் தாழ்ந்தவர்கள் என்று பார்ப்பதா அல்லது ஆண் சமையலுக்குப் போகட்டும்; நான் அலுவலகத்திற்குப் போகிறேன். நீ பாவாடை அணிந்து கொள் என்று அட்டகாசம் செய்வதா? இல்லை; தனக்கு வேண்டும் என்பதைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கின்ற ஒரு மனப்பக்குவம் வருவதுதான் சுதந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது அறிவின்பாற்பட்ட சுதந்திரம்.
"இந்த ப்ளவுஸ் இந்தப் புடவைக்கு மேச்சா இருக்காடி' என்று நான்கு தோழிகளோடு இரண்டு ப்ளவுஸுக்கு கடை கடையாய் ஏறுவது சுதந்திரம் என்று எனக்குத்தோன்றவில்லை. எதிலேயோ அடிமைப்பட்டுக் கிடக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். "அந்தப் பையன் என்னைப் பார்த்து லவ் யூன்னு சொல்றான். நான் என்ன செய்யட்டும்' என்று தன்னுடைய தோழிகளோடு ஒருத்தி புலம்புவாளாயின், அவள் சுதந்திரம்பெற்றவளாக நான் நினைக்க மாட்டேன்.
"நான் வேலைக்குப் போகட்டுமா, வேலைக்குப் போனா ரெண்டா யிரம் ரூபா காசுகிடைக்கும். காசு கிடைச்சா நம்ம வீட்ல அரிசி பருப்புக்கு உதவும்' என்றுஅனுமதி கேட்டு கை பிசைந்து நின்றால், அவளுக்கும் ஏதோ அடிமை சிரமம்இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. சுதந்திரம் என்பது தன்னுடைய விஷயங்களைதானே மிக சுயமாகச் சிந்தித்து செயலாற்றுவதுதான் என்று நான் நினைக் கிறேன். இந்தச் சுதந்திரம் திருமணமான பெண்களுக்கும், இனி திருமணமாகப் போகிறபெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்பதே என் அபிப்பிராயம்.
படித்த, வருவாய் ஈட்டும் பெண்களில் பலர் கருத்து ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பின்தங்கியிருப்பதற்கு ஆண்கள்தான் காரணம். இதில் அப்பனும்அடக்கம்- புருஷனும் அடக்கம்- அண்ணன் தம்பிகளும் அடக்கம். பெண்களுக்கு சில விஷயங்களில் தீர்மானம் செய்யும் அறிவு போதாது என்று, கண்மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாய் நினைக்கும் பூனைபோல, ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிற அகம்பாவம் ஒரு முக்கிய காரணம். அப்பாவும் சகோதரனும்புருஷனும் சொல்வது சரிதான் என்கின்ற அடக்கமும் முக்கிய காரணம். "கிட்டாதாயின் வெட்டென மற' என்ற துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். அதுபட்டுப் புடவையாக இருந்தாலும் சரி- கெட்டிக்கார புருஷனாக இருந்தாலும் சரி. "அவன் இல்லையெனில் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்' என்ற பிடிவாதம்பிடிப்பது ஆரோக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நோய்த்தன்மைஇருக்கிறது.
வாழ்க்கையை மிக லகுவாக எடுத்துக் கொள்வதும், அடுத்த கட்டத்திற்கு விரைவாகப் போவதும், விஷயங்களைத் தானே தீர்மானிப்பதும் வாழ்வின் மிகமுக்கியமான அம்சங்கள். இதற்குப் பொருளாதார விடுதலை நிச்சயம் உதவிசெய்யும். பொருளாதார விடுதலை வேண்டுமாயின், படிப்பு என்பது மிக முக்கியமானவிஷயமாக இருக்கும். படிப்பு என்கிற விஷயத்திற்கு ஒரு முரட்டுத்தனம்,வைராக்கியம் தேவைப்படுகிறது. தான் பெண், தான் மெல்லிலியவள், தான்நாசூக்கானவள், தான் பஞ்சுபோல் மிருதுவானவள் என்ற எண்ணங்களையெல்லாம் உடைத்தெறிந்து, மனதில் திண்மையும் மனத்திண்மையால் உடைகளில் மாற்றமும் ஏற்படுத்தி கம்பீரமாகத் தன்னை நடத்திக் கொண்டு போவதே சுதந்திரத்தின்அடிப்படையான விஷயம்.
ஆரம்ப கட்டங்களில் பெற்றோர்களின் சிறிய ஒத்துழைப்பு இருந்தால் போதும். கூடப் பிறந்தவர்களின் அனுசரணை இருந்தால் போதும். அப்படி வளர்ந்த பிறகும் அது கிடைக்கவில்லையெனில் அந்த இடத்தை விட்டு விலகி தனியாக வாழத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தனிமையை உணர்ந்த எல்லாருமே விடுதலை பெற்றவர்கள் என்பதுயோக மார்க்கம் சொல்கின்ற வழி. தனிமையில் இருக்க பயந்து கொண்டுதான் பல பெண்கள் பிறரைச் சார்ந்தும், சார்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
வன்முறையை தன்மீது ஏவி விட்டால், எந்த நிலையிலும் எப்படியும் சந்திக்கத்தயார் என்ற திமிரும் வீராப்பும் ஒரு பெண்ணுக்கு நிச்சயம் வரவேண்டும். "ரௌத்திரம் பழகு' என்று பாரதி இதைத்தான் சொன்னான்.
மெத்தப் படிப்பு, மெல்லிய ரௌத்திரம், பொருளாதார மேன்மை, தன்னைத் தானேஎடைபோட்டு தான் யார் என்று தெளிகின்ற மேன்மை, அதனால் வரும் உன்னதம் அடைந்தபெண்ணுக்கு சுதந்திரம் காலுக்குக் கீழே இருக்கிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளலாம். இந்தவித விடுதலையை நோக்கி பெண்கள் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருப்பது உண்மை. ஆனால் வெகுதூரம் போகவேண்டும். ''
பெண்களைப் பற்றிப் பேசுகிற இந்த இடத்தில் உங்கள் தாயாரைப் பற்றி ஒரு கேள்வி. உங்களுக்கு தமிழைப் புகட்டியதில் தமிழாசிரியராக இருந்த உங்கள்தாயாரின் பங்கு எத்தகையது? பொதுவாக தந்தையை ஒரு கம்பீரமான முன்மாதிரியாகக்கொண்டே சாதனையாளர்கள் வெற்றி கரமாக முன்னேறியிருக்கிறார்கள். மாறாக உங்களுக்கு அந்த இடத்தில் இருந்தவர் உங்கள் தாயார் அல்லவா?
""அது என் பாக்கியம்!
"தோடுடைய செவியன்' -அம்மா பாடினாள்.
"தோடுடைய என்றால் என்ன?' என்று நான் கேட்டேன்.
"தோடு உடைய செவியன்' என்று அம்மா பிரித்துச் சொன்னாள்.
அடடா! இப்படித்தான் தமிழைப் பிரித்துப் படிக்க வேண்டுமா? எனக்கு எட்டுவயதில் தமிழை எப்படிப் பிரித்துப் படிப்பது என்பது புரிந்து போயிற்று. தமிழ் சிக்கலாக இருந்தாலும் எப்படிப் பிரிப்பது என்பதை நான் யோசித்துப்பார்க்க கற்றுக் கொண்டேன். அம்மா நாயன்மார் கதைகளைச் சொன்னாள், திருவிளையாடல் புராணம் சொன்னாள். "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை விளக்கினாள். எனக்கு பத்து வயது. அம்மாவும் நானும் சமையற்கட்டில் இருந்தபடி பேசிக்கொண்டே இருப்போம். பலதும்நான் கற்றுக் கொண்ட இடம் சமையற்கட்டு.
"பாலகுமாரனைப் பற்றிக் கவலைப்படாதே சுலோச்சனா. அவன் விழுந்து புரண்டுஎழுந்து வருவான். எல்லாருமே பிறக்கின்ற பொழுது ஞானியாகப் பிறப்பதில்லை. நடுவில் சில விஷயங்கள் மனிதர்களை மாற்றும். உயரத் தூக்கி வைக்கும்' என்றுஎன் உறவுக்காரர் என் முகத்தைப் பார்த்தபடியே சொன்னார். "இவனைதானே மகாபெரியவாள் முன்னாடி போய் நிறுத்தினே' என்று கேட்டார். அம்மா, ஆம் என்றுதலை அசைத்தாள். அது பற்றி அம்மாவிடம் கேட்டேன். சென்னை சமஸ்கிருதகல்லூரியில் மகாபெரியவாள் முகாமிட்டிருந்த போது, அங்கே தனியேஅமர்ந்திருந்த அவரிடம் என்னைக் கொண்டு போய் நிற்க வைத்து நமஸ்கரிக்கச் சொல்லி, "நீங்கள் இவனை ஆசீர் வதிக்க வேண்டும்' என்று அம்மா கேட்க, மகாபெரியவாள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடியும்அம்மா மெல்ல கேட்க, "நீ இவனைக் கருவுற்றிருக்கும் போதே தடவித் தடவிஆசீர்வாதம் செய்திருக்கிறாய். அது போதும். அது இவனை நல்ல இடத்திற்குக் கொண்டு வரும்' என்று அவர் சொன்னாராம். அம்மா இதைச் சொல்ல, உண்மையா என்றுநான் கேட்க, அம்மா சிரித்துக் கொண்டே நகர்ந்து போனாள்.
கார்ட்டூன் என்கிற சித்திரக் கதைகளை தன்னுடைய பள்ளியிலிலிருந்து கொண்டுவந்து கொடுப்பாள். முழு ஆங்கிலத்தையும் உரக்க படிக்கச் சொல்லுவாள். நான்படிப்பில் சுமாராக இருந்தாலும், மொழிகள்மீது எனக்கு ஆர்வம் ஏற்பட அவளேகாரணம். பதின்மூன்று வயதில் "பொன்னியின் செல்வன்' படிக்கக் கொடுத்து,"ஆழ்ந்து படி, உன்னை இது எங்கேயோ கொண்டு போகும்' என்று சொன்னாள். சுற்றுச் சூழ்நிலை மறந்த ஒரு நிலைக்குக் கொண்டு போகும் என்று நினைத்துநான் அதைப் படித்தேன். "எங்கேயோ கொண்டு போகிறது அம்மா' என்று அவள் வாக்கியத்தைச் சொன்னேன். "என்ன புரிந்தது' என்று கேட்டாள். "எல்லாம் புரிந்தது' என்று சொன்னேன். "எந்த இடம் பிடித்தது' என்று கேட்டாள். "வந்தியத்தேவனும் குந்தவையும் காதலிலித்த இடம் எனக்குப் பிடித்தது' என்று கூறினேன். "ஏன் பிடித்தது' என்று கேட்டாள். "அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் பேச்சிலேயே காதலிலிக்கிறார்கள்' என்று சொன்னேன். "பதின்மூன்று வயதில் இது புரிந்து போயிற்றா. நீ மிகவும் சிரமப்படுவாய். அதனால் என்ன. சிரமப்படுவதில் தவறில்லை. புரிந்து கொள்ளுவதுதான் முக்கியம்' என்று சொன்னாள்.
பதினாறு வயதில் இராமாயணச் சொற்பொழிவுக்குப் போய், கொத்தமங்கலம் சுப்புஅவர்களிடம் சில குறுக்கு கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்க, அதற்கு, "உனக்கு வாழ்க்கை பதில் சொல்லும். நான் சொல்ல முடியாது. ஆனால் சபையில் தைரியமாகக் கேள்வி கேட்டதற்கு என் அன்புப் பரிசு' என்று பெரிய மாலையை என்கழுத்தில் போட்டார். நான் அந்த மாலையோடு அம்மாவிடம் போய் நின்றேன். "என்கழுத்தில் விழுந்த முதல் மாலை' என்று அவள் வாய் திறந்து சொன்னாள். "இன்று நல்ல நாள், உனக்கு மாலை போட்டவர் மிக நல்ல மனிதர், நீ வாழ்வாங்கு வாழ்வாய்' என்று ஆசீர்வதித்தார். அந்த மாலை நாராகி என் வீட்டில் வெகுநாள்வரை தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் குப்பையில் போட அம்மா முயலவே இல்லை.
அப்பாவின் காட்டமான, ஆத்திரமான, அசூயையான பேச்சிற்கு அம்மா பலமுறை இரையாகி இருக்கிறாள். "படிப்பு என்ன பெரிய படிப்பு. உன் படிப்புல நாய் . . . . ' என்றவசவை அப்பா அடிக்கடி உபயோகப் படுத்துவார். "நான் வேறு, என் படிப்பு வேறு. அதை ஏன் கேவலமாகப் பேசுகிறீர் கள்' என்று அம்மா எதிர்த்தபோது, "அப்படியா உன் படிப்பு தலையில இரண்டு அடி போடறேன்' என்று சொல்லி அவள் கன்னத்தில்அறைந்தார். "நான் உன்னை அடிக்கலையே உன் படிப்பைதானே அடிச்சேன்' என்றுசொல்ல, நான் விக்கித்துப் போய் நின்றேன். முரட்டுத்தனமாய் அவரிடம் முட்டமுயன்றபோது, தடுத்தபோது, "முட்டினால் அவர்களுக்குப் புரியாது. முரண்டு செய்தால் அவர்களுக்குப் புரியாது. வாழ்க்கை அவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும். முரடர்களை ஊன்றிக் கவனித்துப் பார், உன்னிடமிருக்கும் முரட்டுத்தனம் விலகும்' என்று சொன்னாள்.
இருபத்தியோரு வயது. நான் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தேன். என் வீட்டிற்கு ஒரு உறவினர் வந்தார். மின்சாரம் தடைப்பட்டதால் ஹரிக்கேன்விளக்கை ஏற்றி வைத்தோம். "இதற்கு ஏன் ஹரிக்கேன் விளக்கு என்று பெயர்தெரியுமா?' என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. நான் யோசித்தேன். "ஒளி நிரம்பி யதால் இதற்கு ஹரிக்கேன் என்று பெயர்' என்று சொன்னேன். "புரியவில்லையே' என்று சொன்னார். "ஹரி என்றால் ஒளி என்று பெயர். அதனால் இது ஒளி நிரம்பிய பாத்திரம். கேன்- பாத்திரம். கெரசின் வாங்குகிற டப்பா' என்பதாகநான் சொன்னவுடன் அவர் வாய்விட்டு சிரித்தார். "ஹரிக்கேன் என்பது ஒருபுயல். அமெரிக்காவில் வீசும் புயலுக்கு ஹரிக்கேன் என்று பெயர். ஹரிக்கேன்என்ற புயலைத் தாங்கும் வண்ணம் அமைத்ததால் இதற்கு ஹரிக்கேன் லேம்ப் என்றுபெயர்' என்று சொன்னார். என்னுடைய விளக்கத்திற்கு வீடு விழுந்து விழுந்துசிரித்தது. அம்மாவும் சிரித்தாள். எல்லாரும் போன பின்பு "ஒளி நிரம்பியபாத்திரம் ஹரிக்கேன் என்று சொன்னாயே! உன்னுடைய கற்பனை எனக்குப் பிடித்திருக்கிறது' என்று சொன்னாள். நான் தவறு செய்தாலும் என் அம்மா என்னைகிறங்கிப் போய் கேட்டிருக்கிறாள். இதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்; காதார அனுபவித்திருக்கிறேன்.
அம்மா என்பவள் மகள் வடிவம்; மகள் என்பவள் அம்மாவின் ரூபம் என்றுஉணர்ந்திருக்கிறேன். என் அம்மாவிற்கு வயதாகிவிட்டது. "இந்த மார்கழிதாண்டாது, இந்த பொங்கலுக்கு உயிரோடிருக்க மாட்டேன், இந்த தீபாவளிக்கு நானில்லை' என்றெல்லாம் பல நூறு முறை சொல்லி எண்பத்து மூன்று வயது வரைதிடகாத்திரமாகவே வாழ்ந்தாள். மூப்பின் காரணமாகத்தான் இருதயம் தவித்ததே தவிர பெரும் நோய் எதுவும் அவளைத் தீண்டவில்லை. அம்மா என் தங்கை யோடு, என் வீட்டிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள இன்னொரு வீட்டில் இருந்தாள். என்ன தோன்றியதோ தெரியவில்லை. "நான் உன்னோடு சில நாட்கள்இருக்கிறேன்' என்று தனது பெட்டி, படுக்கையைத் தூக்கிக் கொண்டு என்னிடம்வந்து விட்டாள்.
என் வீடு விசாலமானது. அவளை அன்போடு ஏற்றுக் கொண்டது. என் மனைவியர் இருவரும் என் அம்மாவின்மீது அன்பு மழை பொழிந்தார்கள். அவளுக்கு ஓடி ஓடி உதவிகள் செய்தார்கள். என் அம்மாவும் ஒரு தமிழ் பண்டிதையைப் போல-பள்ளிக்கூடத்து ஆசிரியைபோல கம்பீரமாக அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டாள். வீட்டிற்கு வெள்ளை அடிக்க பேச்சு வந்தபோது, "ஒரு மூன்று நாள் தங்கைவீட்டில் இருக்கிறாயா' என்று தெரியாமல் கேட்டு விட்டேன். பெரிய கோபம்வந்து விட்டது. "என்னை இங்கிருந்து ஒழித்துவிட தீர்மானம் செய்து விட்டாயா. நான் இங்கிருப்பது பிடிக்கவில்லையா. நான் தண்டச்சோறு என்று நினைக்கிறாயா. உனக்கு நான் பாரமாக இருக்கி றேனா' என்று வேகமாக வார்த்தைகளை அடுக்கினாள். என் அம்மாவின் குணம் இது. எப்பொழுது கொஞ்சுவாள், எப்பொழுது சீறுவாள்,எதற்கு கொஞ்சுவாள், எதற்கு சீறுவாள் என்று கணிக்கவே முடியாது.
அம்மாவை நாங்கள் எல்லாரும் சேர்ந்து சமாதானப்படுத்தி, "தூசு தும்பு இருக்குமே என்று சொன்னோம்' என்று சொல்ல, "அது பற்றி அக்கறை இல்லை' என்றுசொல்லிலி விட்டாள். வீடு வெள்ளையடிப்பு நடந்தது. அம்மா அந்த தூசுக்குநடுவே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த வேலையாட்களையும் அதட்டிவேலை வாங்கிக் கொண்டிருந்தாள். "எனக்கு இப்பத்தான் தெரிகிறது, நீ ஏன்போகமாட்டேன் என்கிறாய் என்று. கீழே வேலை செய்யறதுக்கு பத்துபேர் கிடைத்தால் போதும். உரத்தகுரலில் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கலாம் இல்லையா? டீச்சராகவே இருந்து பழகிடுச்சு இல்லையா?' என்று கேட்க வாய்விட்டுச் சிரித்தாள். நான் அவளை கேலி செய்தாலும் அவளுக்குப் பிடிக்கும்.
இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தடி ஊன்றி தன் கட்டிலை விட்டு இறங்கி ஹால் முழுவதும் நடந்து டைனிங் டேபிள் அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டாள். "நாம் இரண்டு பேரும் சாப்பிடலாமா' என்று கேட்டாள். காலை சிற்றுண்டிக்கு என் எதிரே அமர்ந்து கொண்டாள். "இறப்பது என்றால் என்ன. மரணம் என்பது என்ன. மரணத்திற்குப் பின் மனிதனுடைய நிலை எது. மரணம் வரும்போது ஒருவர் என்னசெய்ய வேண்டும்' என்றெல்லாம் கேள்விகள் கேட்டாள். நான் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன். "தெரிந்தால் சொல், தெரியவில்லையே என்று வருத்தப்படவேண்டாம்' என்று சொன்னாள். "எனக்குத் தெரியும், உனக்குத் தெரிய வேண்டுமா என்பது பற்றி யோசிக்கிறேன்' என்று பதில் சொல்ல, "அதையும் நீயே முடிவுசெய். எனக்குத் தெரிய வேண்டாம் என்றால் வேண்டாம்' என்று சொன்னாள். "இல்லை, நான் சொல்கிறேன்' என்று பதில் சொன்னேன். பதில் சொல்லும் போதே உள்ளேஆடிற்று. மரணம் பற்றியும், அது வருகிற விதம் பற்றியும், மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை பற்றியும், மனம் எதனோடு சேர்ந்து கொள்ளும் என்பதுபற்றியும் நான் மெல்ல விவரித்தேன். அம்மா அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்ல பேச்சு முடித்து அவளைப் பார்த்தேன். அவள் பதில் கூறாமல் எழுந்து தன்னுடைய படுக்கைக்குப் போனாள். குழப்பம் அடைந்துவிட்டாளோ. . . கோபம் அடைந்து விட்டாளோ என்று தோன்றி நான் பின்னாலேயே போனேன். "வேறு ஏதேனும் கேள்விகள் உண்டா' என்றேன். "இல்லை, எவ்வளவு அழகாக ஒருவிஷயத்தைச் சொல்கிறாய். எத்தனை தெளிவாக யோசிக்கிறாய். உன்னை நினைத்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. உன் எதிரே அழுதால் நான் மரணத்திற்குப்பயந்து அழுகிறேன் என்று நினைத்துக் கொள்வாய். நான் இப்படிப்பட்டபுத்திசாலிலியான பிள்ளையைப் பெற்றேனே என்று கண் கலங்குகிறேன். அதனால்தான் இங்கே வந்து விட்டேன். நீ போ. நான் கொஞ்சம் அழுகிறேன்' என்று சொல்லிலிஎன்னைத் துரத்தி விட்டாள். எனக்கு அழுவதா சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை. அம்மா இறந்தாள். நான் அழுதேன்.
அம்மாவை ஹாலில் கிடத்தியிருந்தார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர் தேவகோட்டை வா. மூர்த்தி வந்தார். அவரைப் பார்த்ததும் அம்மாவின் நினைப்புஅதிகரிக்க அழுதேன். தேவகோட்டை வா. மூர்த்தியை தனது இரண்டாவது மகன் என்றுஅம்மா அடிக்கடி சொல்வாள். என்னுடைய சகோதரன் போன்ற நினைப்பு எழுந்ததால்அழுதேன். அம்மாவை வேனில் வைத்து அடையார் மின்சார சுடுகாட்டிற்கு எடுத்துப்போனோம். அம்மாவை அங்கு கிடத்தியிருந்தார்கள். அடுத்த சிதைக்காகக் காத்திருந்தார்கள். அம்மாவுக்கு அருகில் உட்கார்ந்தபடி, அம்மாவையேவெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மிக ஆசையாய் அவள் நெற்றியை,முகவாயை, தோள் பட்டையை தொட்டுத் தடவி விட்டேன். எத்தனை அழகு, எத்தனை அமைதி, எத்தனை அனுபவம் என்று பெருமிதப்பட்டேன். அம்மாவை தண்டவாளம் போன்றஇடத்தில் வைத்து, வயிற்றில் வறட்டி வைத்து, மேலே கற்பூரம் வைத்து என்னைக்கொளுத்தச் சொன்னார்கள். சிதைக்கு தீ மூட்டியது போல அந்த கற்பூரத்தைஏற்றினேன். அம்மாவை சடேர் என்று உள்ளே தள்ளினார்கள். நெருப்பு உள்ளேவாங்கிக் கொண்டது, அம்மாவை விழுங்கத் துவங்கியது. நான் கதறினேன். என்னைப் பலரும் தாங்கிப் பிடித்து சமாதானம் செய்தார்கள். அதற்குப் பிறகு நான் அழவில்லை. ஏனெனில் அம்மா தனியாக இல்லை. என்னோடு இரண்டறக் கலந்து விட்டாள். இன்றைய என் தமிழ் அம்மா எனக்குப் பிச்சையிட்ட தமிழ். என் தமிழில் அம்மா இருக்கிறாள். ''
உங்களுக்கு முகவரி தந்த முதல் கதை எப்படி உருவானது? அது முற்றிலும் புனைவா? அல்லது உங்கள் வாழ்வனுபவத்திலிருந்து பிறந்ததா?
""வாழ்வைப் பிரதி எடுக்காமல் எந்தக் கலையும் உயிர்வாழ முடியாது. எழுத்துஅதில் முதன்மையானது. இந்த இரண்டாயிரத்து பத்தில் என் வயது அறுபத்தைந்து. அப்போது எனக்கு வயது இருபத்து நான்கு. கதை எழுத மனம் குதூகலித்த அளவுக்கு கதைகள் எழுத வரவில்லை. அதற்கு மெனக்கெடல் அதிகம் இருந்தது. கதைஎழுத விடாமல் ஒரு சோம்பேறித்தனம் என்னைத் தடுத்தது. உட்கார்ந்து பதினைந்து பக்கங்கள் எழுத முடியாத அளவுக்கு மனதில் ஒரு பரபரப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஒரே இரவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இருந்தேன். புகழ் என்கிற விஷயத்தின் மீது அடங்காத தாகம் இருந்தது. ஆத்திரம் இருந்தது. எல்லோரும் என்னைக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பெரிய ஏக்கம் இருந்தது.
நான் அறிந்து கொண்டது மிகக் குறைவு. ஆனால் அதிகம் தெரிந்து கொண்டு விட்டது போன்ற ஒரு பிரமையில் இருந்தேன். ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றி யாரோ சொல்வதைக் கேட்டுவிட்டு, அந்த ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பை மற்றவரிடம் சொல்லி, "இதை படித்திருக்கிறாயா' என்று நான் படித்தவன் போல பீற்றிக் கொண்டேன்.
உண்மையும் இல்லை, உழைப்பும் இல்லை. ஆனால் உயர வேண்டும் என்ற வெறி மட்டுமே இருந்தது. என்னோடு நெருக்கமாக இருந்த பல நண்பர்களுக்கு உயர வேண்டும் என்ற எண்ணம்கூட இல்லை. அதனால் தனித்து விடப்பட்டேன். வெளியே எங்கும் போகக்கூடாது. மற்றவரோடு அதிகம் பழகக்கூடாது என்ற தந்தையின் கட்டளையால் எனக்கு வெளியுலகம் தெரியாமல் இருந்தது.
யார் நல்லவர், யார் கெட்டவர், எவருக்கு என்ன தெரியும், எவருக்கு எதுதெரியாது என்று புரியாமல் இருந்தது. நான் மிக நன்றாகப் பாடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கேயோ பிசகியது. ஓவியம் வரையத்தெரியுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில கோடுகள் தவறாகவே விழுந்தன. தட்டிக் கொடுத்து வழி நடத்துபவர் என்று எவருமே இல்லை.
"அவன் அந்த வேலையில் சேர்ந்துட்டான், இவன் இந்த வேலையில் சேர்ந்துட்டான்'என்று நூற்றுநாற்பது ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிலிகள் என்று எனக்கு காண்பிக்கப்பட்டார்கள். துணிந்து எந்தக் காரியத்திலும் ஈடுபட முடியாதவர்கள், நல்லவர்கள் என்றுவர்ணிக்கப்பட்டார்கள்.
நான் வேலை செய்த சிம்சன் குரூப் கம்பெனியில் ஒரு தகராறு நடந்தது. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. மிகப் பெரியவன்முறை வெடித்தது. அப்போது அரசுக் கெதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்இறங்கினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்து, முதன்முதலாகச் சந்தித்த எதிர்ப்பு அது. மிக வேகமாக அதை அடக்க வேண்டுமென்று அரசு நினைத்தது. அந்தப் போராட்டத்தின் நீள, அகலம் தெரியாமல் அதில் ஈடுபட்டேன். மிகக் கடுமையாக போலீஸாரால் தாக்கப்பட்டேன்.
"ஓடிப் போயிடு. , ஆளுங்கட்சிக்காரங்க கொன்னுருவாங்க. இல்லை, போலீஸ்காரங்க அடிச்சு உள்ள போட்டுருவாங்க. எங்கனா தப்பிச்சுக்க' என்று பயமுறுத்த, அந்த பயமுறுத்தலை உள்வாங்கிக் கொண்டு, நான் சிறிதளவு காசோடு ஊரை விட்டு வெளியேறினேன். கிட்டத்தட்ட இரண்டு மாத அலைச்சல்.
எங்கெங்கோ, எந்தெந்த இடத்திலோ வாழ்க்கை. அந்த நேரம் எனக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம் கிடைத்தது. அதைப் படிக்கப் படிக்க நான் தெளிவடைந்தேன். "நான் உண்மையாக இருக்கிறேனா?' என்று எனக்கு நானே சோதிக்கிற, கேள்வி கேட்டுக் கொள்கிற, ஆழ்ந்து உற்றுப் பார்த்துக் கொள்கிற ஒரு வார்த்தையை அந்தப் புத்தகம் அதாவது ஜே. கிருஷ்ணமூர்த்தி தான் சொல்லிக் கொடுத்தார்.
"தொழில் நுட்பத்தில் மனிதன் நம்பவே முடியாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளான். ஆனாலும் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்புஇருந்தது போலவே இன்றும் சண்டையிட்டுக் கொண்டு, பேராசையுடையவனாக,பொறாமையுடையவனாக, பெரும் துக்கத்தைச் சுமந்து கொண்டு வாழ்கிறான்' என்ற ஜே. கே. யின் நவயுக மனிதன் பற்றிய மதிப்பீடு எனக்குள் ரசாயனம் தெளித்தது.
எனக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்ததையெல்லாம்- நான் இன்னவிதம் என்று ஏற்படுத்திக் கொண்டிருந்த கற்பனை களையெல்லாம் உடைத்தெறிந்து, உண்மையில் எனக்கு என்ன தெரியும், நான் யார் என்று ஆராய, ஒன்றுமே பிடிபடாமல் ஒரு வெறுமை ஏற்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல என்னை நான் பலப் படுத்திக் கொள்ளத் துவங்கினேன். எவரோடும் பேசாமல் எதிரே நடப் பதை உற்றுப் பார்க்கத் துவங்கினேன். நடந்தவைகளை எண்ணிப் பார்த்தேன். அடி தாங்கமுடியவில்லை என்பதை உணர்ந்து கொண் டேன். அடி தாங்க முடியாத. . . அலட்டுகிற ஒரு மனிதனைப் பற்றி, சிந்தித்துக் கதையாக்கினேன். அதற்குதான் "மெர்க்குரிபூக்கள்' என்று பெயர் சூட்டினேன்.
எழுத்து ஒரு தந்திரம். இசை ஒரு தந்திரம். சினிமா ஒரு தந்திரம். எல்லா கலைகளுக்குப் பின்னாலும் தந்திரம் இருக்கிறது. தந்திரமற்ற வாழ்க்கை இருக்குமோ என்று யோசித்தேன். சந்தேகமற்று மற்றவர்களை நம்பினால் என்ன ஆகும்என்று சோதனை செய்து பார்த்தேன்.
என்னை வந்து சந்தித்தவர்களை முழுவதும் நம்பினேன். முகத்தில் குத்துவிழுந்தபோதும் நம்பினேன். உள்ளே அமைதியாக இருந்து, மற்ற வாழ்க்கையின் தந்திரங்களை, மற்ற மனிதர்களின் ஆசாபாசங்களை உற்றுப் பார்க்க, எழுத நிறைய கிடைத்தது. எழுத எழுத மனம் பக்குவப் பட்டது.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை உண்டு. என் வேலை என்ன என்றுதெரிந்து. நான் எழுத்தாளன் என்பதைப் புரிந்து கொண்டேன். மற்ற வேலைகளில் அவ்வப்பொழுது பேராசையின் காரணமாக மூக்கை நுழைத்தபோதும் மெல்ல பின்வாங்கிஎன் வேலை எது என்று தெரிந்து. . அதில் உறுதியாக- சந்தோஷமாக இருக் கிறேன். என் எழுத்தும் மற்றவரை சந்தோஷப்படுத்திக் கொண்டி ருக்கிறது. ''
உங்கள் எழுத்துக்களை வெகுஜன வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்ததில் "குமுத'த்துக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா? பொதுவாக, வெகுஜனஎழுத்துலகில் அடையாளம் பெற நினைக்கிற யாரும், இந்தக் கோட்டைக்குள் நுழைய முடியுமா என்று அண்ணாந்து பார்க்கிற இதழ்களாக அல்லவா "குமுத'மும்" விகட'னும் அன்று இருந்தன?
""ஆமாம்! இந்த விளம்பர யுகத்தில் எவருமே சுயம்புவாகத் தன்னை அரங்கேற்றிக்கொள்ள முடியாது. நான் சுயம்பு இல்லை. பல கைகள் என்னைத் தடவித்தடவி வளர்த்தி ருக்கின்றன. அதில் ஒரு கை தழும்பாய் என் நெஞ்சில் இன்னமும் இருக்கிறது. அந்த கைக்குப் பெயர் பால்யூ. அன்றைய "குமுதம்' இதழின் தூண்போன்ற இதழாளர். பால்யூ மனிதர் களைப் பார்க்கும் விதமும் விசாரிக்கும் விதமும் எனக்குப் புதிதாக இருந்தன.
அது நியூ உட்லண்ட்ஸ் ஓட்டல். ஏதோ ஒரு திருமணத்திற்குப் போய் விட்டு நான் திரும்புகிறேன். என்னுடைய ஸ்கூட்டரை எடுக்க ஸ்டாண்டுக்கு வந்தேன். அதேஇடத்திற்கு பால்யூவும் தன்னுடைய மொபட்டை எடுப்பதற்காக வந்தார். வணக்கம் சொன்னேன். "வெகு நாளாயிற்று சந்தித்து' என்று குசலம் கேட்டேன். அவரும் மிகசந்தோஷமாகவே பேசினார். "சுவாரசியமாக எழுதினால் "குமுதம்' ஏற்றுக்கொள்ளுமா. அந்தக் கோட்டைக்குள் புக முடியுமா?' என்று அந்த ஹோட்டல் வாசலிலில் நின்று பால்யூவிடம் கேட்க, "கோட்டை என்று எந்த இடமும் இல்லை. எதற்குள் நுழைய வேண்டுமென்றாலும் அதற்குண்டான விஷயங்களைச் செய்தால் நுழைந்து விடமுடியும். உங்களுடைய எழுத்து சுவாரசியமாக இருக்கிறது என்றால்,"குமுதம்' சுற்றிச் சுற்றி வந்து விஷயங்களை வாங்கும்.
"குமுதம்' என்ன விரும்புகிறது என்பதை திரும்பத் திரும்ப "குமுதம்' படித்துப் புரிந்து கொள்ளுங்கள். இதில் கர்வம் பார்க்காதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்பதை இப்பொழுதே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இலக்கிய ரீதியாய் பத்திரிகையில் எழுதுவது ஒரு வழி. "குமுத'த்தில் எழுதுவது இன்னொரு வழி. "ஆனந்த விகட'னில் எழுதுவது இன்னொரு வழி. எந்த வழி உங்களுக்கு வேண்டுமென்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். வாசலுக்கு வந்து உள்ளுக்குள் வரவேண்டும் என்று கேட்டால், மாட்டேன் என்றுயார் சொல்வார்கள். அதேபோல வாசலுக்கு வந்து வரட்டுமா என்று கேளுங்கள்' என்று சொல்ல, நான் இதை சுப்ரமண்யராஜுவிடம் தெரிவிக்க, நாங்கள் இரண்டுபேரும் "குமுதம்' போனோம்.
அங்கு போய் வாசலிலில் நின்று ஆசிரியரிடம் போனில் பேசினோம்.
"எங்கிருக்கிறீர்கள்? இங்கு வர எவ்வளவு நேரம் ஆகும்' என்று "குமுதம்' ஆசிரியர் கேட்க, "ஒன்றரை நிமிடம் ஆகும்' என்று நாங்கள் பதில் சொல்ல, அவர் திகைத்தார். "வாசலிலில் நின்று பேசினால் வரக் கூடாது என்று என்னால் சொல்லமுடியுமா. வேலைகள் அதிகமிருக்கின்றன. இருப்பி னும், ஐந்து நிமிடங்கள் சந்திக்கின்றேன்' என்று நேரம் ஒதுக்கி அவர் காத்திருந்தார். நாங்கள்அவரிடம் போய் வணக்கம் சொன்னோம்.
"குமுதம்' பற்றிய எங்களுடைய அபிப்பிராயத்தை வேகமாகவும், தெளிவாகவும் சொன்னோம். அவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். "உண்மையாகப் பேசுகிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறது. "குமுதம்' இலக்கியப் பத்திரிகையாக மாறச்சொல்கிறீர்கள். எனக்கு ஆட்சேபணை இல்லை. இலக்கியத் தரமாக, அதே சமயம் எளிமையாக நீங்கள் எழுதிக் கொடுங்கள். அவை படிப்பதற்குச் சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் போடுகிறேன். எப்பொழுது தருவீர்கள் உங்கள் சிறுகதைகளை?' என்று கேட்டார். நாங்கள் பேசாதிருக்க, "நாளை தர முடியுமா. ஒரு வாரப்பத்திரிகை அப்படித்தான் கேட்கும்' என்று சொன்னார். நான் சரி என்றுசொன்னேன். மறுநாள் கொண்டு போய் இரண்டு சிறுகதைகள் கொடுத்தேன். இதுதான் என்னுடைய வெற்றி. இந்த வெற்றிக்குக் காரணம் பால்யூ.
சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் கவனமாகவும் எழுத முயற்சி செய்தேன். என் இலக்கியத் தரத்தை சற்றும் நழுவ விடாமல் தெளிவாக, எளிமையாக எழுத, என்எழுத்துகள் குமுதத்தில் பிரசுரமாக, அவற்றை படித்துவிட்டு "குங்கும'த்தில் அப்பொழுது ஆசிரியராக இருந்த சாவி எங்களை "குங்குமம்' தயாரிக்கச் சொன்னார். அந்த "குங்குமம்' தயாரிப் புக்குப் பிறகு வாரப் பத்திரிகைகள் ஒவ்வொன்றாய் எங்களை அணைத்துக் கொண்டன. நான் இன்று சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அந்தநியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல் வாசலிலில் ஸ்கூட்டர் ஸ்டாண்டிற்கு அருகே பல நூறுஸ்கூட்டர்களுக்கு நடுவே என்னிடம் அமைதியாகவும் தெளிவாகவும் அன்று பால்யூகொடுத்த உபதேசமே.
பால்யூவை எங்கு சந்தித்தாலும் நான் மரியாதையாக எழுந்து நின்று கைகூப்புவது வழக்கம். இன்றும் அவரைப் பார்த்துக் கைகூப்ப மனம் ஏங்குகிறது. ஆனால் அந்தப் பெருமகன் இன்று உயிரோடு இல்லை. ''
சினிமாவில் வெற்றிகரமாக சாதித்த வெகுஜன எழுத்தாளர்களில் நீங்களும் சுஜாதாவும் முக்கியமானவர்கள். சினிமா உங்களுக்குக் கொடுத்தது என்ன?
""இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சினிமாவில் நான் சேர்ந்தது சினிமாவுக்காக அல்ல என்று தோன்றுகிறது. சினிமாவைப் பற்றி கதைகள் எழுதும் எண்ணத்தில் சினிமாவின் மீது ஆசைப்பட்டிருக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் சினிமாவைப் பற்றி கதை எழுதிக் கிழித்து விடவில்லை.
சினிமா எனக்கு வேறு ஒரு உலகை- வேறுவிதமான மனிதர் களை- நல்ல அனுபவங்களை-அந்த அனுபவத்தால் புத்தி தெளிவை- நிதானத்தைக் கொடுத்திருக்கிறது. வாழ்கதமிழ் சினிமா. இந்த நேரத்தில் ஒரே ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
சினிமாவில் நான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அந்த உதவி இயக்குனர் வேலையில் ஒன்று கன்டினியூடி. அதாவது ஒரே ஒரு சீனை முதல் நாள் எடுத்து, பிறகு இரண்டு நாள் கழித்து எடுத்து, பிறகு ஒரு வாரம் கழித்து மறுபடியும் தொடர்வார்கள். அதாவது தோட்டத்தில் ஆடிப் பாடிய பெண் அதே உடைகளோடுதானே வீட்டிற்குள் நுழைவாள். தோட்டத்தில் ஆடிப் பாடியது ஜனவரி 1-ஆம் தேதிஎன்றால், வீட்டிற் குள் நுழைவது பிப்ரவரி 3-ஆம் தேதியாக இருக்கும். அப்படித்தான் ஷூட்டிங் நடக்கும்.
அந்த நேரம் வீட்டிற்குள் நுழையும்போது தோட்டத்தில் ஆடிய போது என்ன நகைகள் அணிந்திருந்தாளோ அதோடு இருப்பதுதான் சிறப்பாக இருக்கும். இதற்குத்தான் கன்டினியூடி என்று பெயர். காதில் தோடு, கை வளையல்கள், கழுத்து நகைகள்,மூக்குத்தி, கால் மெட்டி, புடவை, ரவிக்கை, தலை வாரலுடைய அமைப்பு இவையெல்லாம் ஒரு உதவி இயக்குனர் குறித்துக் கொள்ள வேண்டும்.
அவர் மிகப் பெரிய நடிகை. நன்கு நடிக்கக் கூடியவர். படப் பிடிப்பில், நான்அவருடைய நகைகளைக் கொடுத்துக் கொண்டிருந் தேன். ஒரு நமுட்டுச் சிரிப்புஅவரிடம் இருந்தது. படப்பிடிப்பு முடிந்த போது "தயவு செய்து அந்த நகைகளைக் கழட்டிக் கொடுத்து விடுங்கள் அது மறுபடியும் கன்டினியூடிக்கு தேவைப்படுகிறது' என்று சொன்னேன். அவர், "இப்பொழுது வேண்டாம். களைப்பாக இருக்கிறது. நாளைக்கு காலையில் வந்து தருகிறேன்' என்று சொன்னார். அவர்கிளம்பி போனதும் "நாளைக்கும் இதே இடத்தில் இதே சீனை எடுக்கப் போகிறேன்' என்று டைரக்டர் சொன்னார். சரி. . காலையில்தான் நடிகை நகைகளைக் கொண்டுவந்து விடுவாரே என்று நான் சந்தோஷமானேன். மறுநாள் காலை நடிகை வந்து இறங்கியதும் ஓடிப்போய் நகைகளைக் கேட்டேன். கழுத்துச் செயின், மூக்குத்தி, கைவிரல் மோதிரங்கள், உடுப்பு,ரவிக்கை, தலைவாரல் எல்லாம் அப்படியே இருந்தது. காதில் வேறு தோடுபோட்டிருந்தார். "அந்தத் தோடு இல்லையே' என்று கேட்டதற்கு, "அது காணவில்லை. எங்கேயோ தொலைந்து விட்டது' என்று சாதாரணமாகச் சொன்னார்.
"தயவு செய்து அப்படிச் சொல்லாதீர்கள். அந்த தோடு வேண்டும்' என்றுகூறினேன். "என்னிடம் இல்லை. நேற்றே வாங்கி வைக்க வேண்டியதுதானே. ஏன்இப்போது வந்து உயிரை வாங்குகிறீர்கள்' என்று சள்ளென்று என்மீது எரிந்துவிழுந்தார். காலங்காலையில் உரக்க ஒரு நடிகை என்னைப் பார்த்து கோபமுறுவதை யூனிட்டில் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது.
நான் என்ன செய்வது என்று காஸ்ட்யூமரோடு போய் ஒட்டிக் கொள்ள, அந்தக் காஸ்ட்யூமர் மிகவும் பிரயத்தனப்பட்டு கிட்டத்தட்ட அதேபோல ஒரு நகையைத் தேர்ந்தெடுத்து அவரை அணியச் சொன்னார். அவரும், "ஆஹா, கிட்டத்தட்ட அதே நகையைக் கொண்டுவந்து விட்டீர்களே! பாராட்டுக்கள்' என்று கூறி அணிந்துகொண்டார். நான் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.
ஆனால் அந்த காஸ்ட்யூமர் அப்படி மகிழவில்லை. கோபமாக அந்த நடிகையைத் திட்டிக்கொண்டே நகர்ந்து போனார். அவர் திட்டியது என் காதில் மட்டும்தான் விழுந்தது. படப்பிடிப்பு ஆரம்பித் தது. இரண்டு டேக்குகள் முடிந்தன. மூன்றாவது டேக் ஆரம்பிக்கிறபோது ஒரு க்ளோஸப் ஷாட் வைத்திருந்தது.
நடிகை டைரக்டரைக் கூப்பிட்டார். "இந்த தோடு நேற்று போட்ட தல்ல; வேறுமாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்' என்று சொன்னார். டைரக்டருக்கு கடுங்கோபம். என்னைக் கூப்பிட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். காஸ்ட்யூமரை அழைத்தார். "என்ன இது' என்று கேட்டார். நாங்கள் விவரிக்க முயல்வதற்குள் நடிகை மேலும் தூண்டிவிட, கோபத்தின் உச்சிக்குப் போனார். நான் புதியவன் என்பதால் என்னை அதிகம் திட்டவில்லை. காஸ்ட்யூமருக்குப் பலமாக இரண்டு அடி விழுந்தது.
காஸ்ட்யூமர் தலைகுனிந்து பல பேர் முன்னால் அவமானத்தோடு மௌனமாக நின்றார். ஒன்றும் பெரிதாகத் தெரியாது என்று மற்றவர்கள் சொல்ல, காமிராமேன் வாக்குறுதி கொடுக்க, காது அருகில் தெரியாதபடி க்ளோஸப் ஷாட் மாற்றிவைக்கப்பட்டு அந்த சீன் எடுக்கப்பட்டது. அந்த நடிகை அன்று மாலை படப்பிடிப்பு விட்டுப் போகும்போது நான் நகைகளைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று நிற்க, அவர் மிகவும் ஒழுங்குப் பிள்ளையாய் நகைகளைக் கழட்டிக் கொடுத்தார். பெட்டியிலிலிருந்த முந்தைய நாள் நகையையும் எடுத்துக் கொடுத்தார். நான் திகைத்துப் போனேன்.
"ஏன் இப்படிச் செய்தீர்கள்' என்று கெஞ்சலாகக் கேட்டேன். "வாழ்க்கை போரடிக்கிறது' என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பிப் போனார். எனக்குத் திகைப்பாய் இருந்தது. காஸ்ட்யூமரிடம் இதைப்போய் சொன்னேன். அவர் பல படங்களுக்குப் பணியாற்றியவர். மறுபடியும் கோபமாகத் திட்டினார். நான் திகைத்துப் போனேன்.
அந்த நடிகை அதற்குப் பின்னால் ஒரு உச்சிக்குப் போய் மெல்ல சரிந்து, கல்யாணம் என்று ஆரம்பித்து, விவாகரத்து என்று மாறி, குழந்தை வேண்டும்என்று சொல்லிலி, குழந்தை வேண்டாம் என்று தள்ளி, சொத்துபற்றி வழக்குப்போட்டு, சொத்து சேர்ப்பதற்காக பொய் சொன்னார் என்று வழக்குப் போட்டு விதவிதமான சிக்கல்களில் சிக்கிக் கொண்டார். அவமானப்பட்டார். நான் யோசித்துப் பார்த்தேன். வாழ்க்கை போரடிக்கிறது என்பதற்காக இவற்றையெல்லாம் செய்கிறாரோ என்று யோசனை செய்தேன். மனிதர்கள் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்கள் என்று எனக்கு அப்போது புரிந்தது. எல்லார் மீதும் எப்போதும் சந்தேகத்தோடு இருப்பதே சரி என்பதும் எனக்கு உறுதிஆயிற்று.
மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். சிலசமயம் மனிதர்களுக்கு கிறுக்குப்பிடிக்கும். பொறுத்துக் கொள்ளவும், தப்பித்துக் கொள்ளவும் பழகிக் கொள்ளவேண்டும். இது சினிமா எனக்குக் கற்றுத் தந்த முதல் பாடம். ''
ஒரு பரந்துபட்ட வெகுஜன வாசகர் வட்டம் இன்றும் நீங்கள் எழுதுகிற கதைகளுக்காக உங்களைக் கொண்டாடுகிறது. அவர்களுக்காக காதல் கதைகள் எழுதிக்கொண்டிருந்த நீங்கள், சட்டென்று ஆன்மிகவாதியாக மாறியது ஏன்?
""பரந்துபட்ட வாசகர் வட்டம் கொண்டவன் என்று சொன்னதற்காக என் நன்றி. அதேநேரம் சட்டென்று நான் ஒரே இரவில் ஆன்மிகத்தின் பால் ஈர்க்கப்பட்டேன் என்று சொல்வதை மறுக்கிறேன். காதல் வேறு; ஆன்மிகம் வேறு என்று ஏன் பிரிக்கிறீர்கள். மனைவி மீது வைத்த காதல் இறைவழிபாட்டை ஒத்துதான்இருக்கிறது. காமம் என்பதைத் தவறு என்று ஒருபோதும் இந்துமதம் என்கிற சனாதனதர்மம் சொன்னதேயில்லை. காதலின் வெளிப்பாடு காமம். அது நெறிமுறைப்பட்டதாக இருப்பின், மிகச்சிறந்த அனுபவமாக, நிம்மதி தரும் விஷயமாக, உடம்பையும் மனதையும் குளிர வைக்கின்ற ஒரு தந்திரமாகச் செயல்படுகிறது. தந்திரா என்று வழங்கப்படும் சனாதன தர்மத்தின் ஒரு கொள்கை, காமத்தை காதலோடுஈடுபடச்செய்கிறது. அடுத்த உயிரின்மீது, மனிதர் மீது கருணையும் மதிப்பும் கொண்டிருந்தால்தான் அவரிடம் இருந்து நல்ல எதிரொலிலிப்பு இருக்கும். அவரிடம் நல்ல எதிரொலிலிப்பு இருந்தால்தான் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் எந்த விஷயமும் சிறப்பாக அமையும். காதலிலின் மகோன்னதம் இத்தகையது. நேசிப்பது என்பது உண்மையாக இருந்துவிட்டால் அதே விதமான அன்பு வெகு வேகமாகத் திரும்ப கிடைக்கும். திக்குமுக்காட வைக்கின்ற அந்த அன்பை அனுபவிப்பது தான் ஆன்மிகம்.
காமம் என்ற வார்த்தைக்கு ஆசை என்று பொருள். எந்த ஆசையையும் சுயநலத்தோடு நிறைவேற்றிக் கொள்ள விரும்பும்போது, அடுத்தவர் என்ன அவஸ்தைப்பட்டாலும் சரி, எனக்கு வேண்டியதை நான் எடுத்துக்கொள்வேன் என்று ஆத்திரத்தோடு அணுகும்போதுஅந்த அனுபவம் கசப்பானதாக மாறிவிடுகிறது. காமம் -அதாவது ஆசை தவறென்று பிதற்ற வேண்டியிருக்கிறது.
"உனக்கு இன்று என்னாயிற்று? தலைவலிலியா, மூச்சுத் திணறலா தூங்கு' என்று மனைவியைத் தூங்க வைத்துத் தலைக்கு தைலம் தடவி, காது வரை கம்பளி போர்த்தி கருணையோடு நடத்தினால், உடல்நலம் தேறியபோது மனைவிக்கு உவகை பொங்கும். பதிலுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆவல் பிறக்கும். நிச்சயம் செய்வாள். அன்போடு இருப்பதுதான் ஆன்மிகம். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணை பிரியாதவை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கிறது. எங்கு அக்கறை இருக்கிறதோ அங்கு அன்பு இருக்கும்.
ஆன்மிகம் என்பது குடும்ப வாழ்க்கையிலிலிருந்து அன்னியப் பட்டது, தள்ளி நிற்பது, துறவறம் போன்றது என்ற விஷயத்தை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை; சொன்னதுமில்லை. உலக வாழ்க்கையில் புரண்டு விழுந்து தன்னை இடையறாதுஅவதானிப்பதே என்னுடைய கொள்கை. அந்த அவதானிப்பைக் கூர்மையாக்கிக் கொள்ள என்னவெல்லாம் தேவை என்பதை நான் சொல்லிலியிருக்கிறேன். ''
உங்களின் இந்த ஆன்மிகப் பார்வைக்கு யார் காரணம்? உங்கள் குருவா?
""இல்லை. ஆரம்பத்தில் என் தாயார் இந்து சமயத்தில் அதிகம் நாட்டம் வரகாரணமாய் இருந்தார். எங்கள் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக புத்தகங்கள் இருக்கும். தேவார திருவாசகங்களை பத்துவயதிற்குள் அதிகம் மனப்பாடம் செய்தேன். தினமும் மாலையில் வட்டமாக அமர்ந்து பக்திப் பாடல்கள் பாடுவது வழக்கம். அப்போது புரியாமல் மனனம் செய்தபாடல்கள், இப்போது புரிந்து பெரிய உவகையைக் கொடுக்கின்றன.
வாழ்வின் பிற்பகுதியில், திருவண்ணாமலை மகான், கடவுளின் குழந்தை,அடியார்க்கு நல்லான் யோகி ராம்சுரத் குமார் அவர்களின் அன்பால் பல ஆன்மிகஅனுபவங்களும் தெளிவும் திடமும் ஏற்பட்டன. எல்லாவற்றிற்கும் அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு. உண்மையான தேடல் உள்ளே இருக்க வேண்டும். என்ன இந்தவாழ்க்கை? ஏன் இந்த பிறப்பு என்ற கேள்வி எழ வேண்டும். சுக சவுகரியங்களில்திருப்தியில்லாத நிலை ஏற்படுகிறபோது, மிகப்பெரிய கேள்வி எழும்போது அந்தவிடை தேடலிலில் சிலருக்கு சில சமயம் வெற்றி கிடைத்து விடுகிறது. என் ஆன்மிகம் என்பது மிக ஒழுங்கான- சீரான வளர்ச்சியைக் கொண்டது.
திடுமென்று நான் ஆன்மிகம் எழுதவில்லை. என்னுடைய முதல் கதையிலேயே கூட ஆன்மிகம் கலந்திருக்கிறது. நான் எழுதிய சிறுகதைகளிலேகூட கடவுள் தேடல் என்ற விஷயத்தினுடைய சாயல் உண்டு. பாசுரங்களும், தேவாரங்களும் மேற்கோள் காட்டுவது மட்டுமல்லாது, எல்லாராலும் கொண்டாடப்படும் நான் எழுதிய குதிரை கவிதைகளில் கூட இந்த ஆன்மிகத் தேடல் மிகப் பலமாக இருக்கும். என்னுடையஇரண்டாவது நாவலான "இரும்பு குதிரைக'ளிலேயே இந்தக் குதிரைக் கவிதைகள் இடம்பெற்று விட்டன.
என்னுடைய ஆன்மிகம் கற்பனையானது அல்ல. நான் அனுபவித்தது. எனக்குத் தெளிவாக ஊட்டப்பட்டது. என்னிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய சத்தியம் அது. அது வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் விஷயம் என்று நான் சொல்வது இன்று புரிந்து கொள்ளப் படாவிட்டாலும் பிறகு ஒரு நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதில் எனக்கு நெல்முனையளவும் ஐயம் இல்லை. ''
பொதுவாக வெகுஜன எழுத்துத் தளத்தில் நாவல் என்ற பெயரில் குறுநாவலுக்குரியபக்க அளவில் சிக்கனமாக எழுதிக்கொண்டு, ஒரேயொரு முன்நகர்வுக்குக்கூடமுயற்சிக் காத எழுத்தாளர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். "உடையாரை' எழுதியதன் மூலம் நீங்கள் அந்த தடைகளை தகர்த்து முன்னேறியிருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?
""உங்கள் வெளிப்படையான பாராட்டுகளுக்கு நன்றி. கடும் உழைப்புதான் இதற்குஅடிப்படை. நல்ல அறிஞர்களின் கட்டுரைகள் தான் இதற்கு ஆணிவேர். பலமுறை பல ஊர்களுக்குப் பயணப்பட்டு சோழ தேசத்தை உணர்வுப் பூர்வமாய் அணுகியதுதான் இந்தநாவலிலின் கிளைகள். பெருவுடையார் கோவிலிலும், இராகு கால துர்க்கை என்றுஇப்போது அழைக்கப்படுகின்ற நிசும்பசூதனி கோவிலிலும், குடந்தைக்கு அருகேயுள்ள பழையாறையிலும், சோழன் மேட்டிலும், சோழன் மாளிகையிலும், உடையாளூரிலும் இரவு பகலாய் அலைந்ததுதான் இந்த நாவலின் சிறப்புக்குக் காரணம்.
என் தாயார் கற்றுக் கொடுத்த தமிழ்தான் என் எழுத்து சிறக்க பெரும் உதவி. இருதய நோயினால் தாக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரண்டு மாதம்சு ருண்டு கிடந்த அந்த நேரத்திலும், அதிகம் படித்து என்னை பலப்படுத்திக் கொண்டதுதான் காரணம். என் எழுத்துப் பணிக்கு இடைஞ்சல் செய்யாது என்னை சீராட்டி வளர்த்த என் மனைவியர்தான் காரணம். என்னோடு இலக்கியம் பேசி என்னை உற்சாகப்படுத்தி ஏன் எழுதலை, எழுதுங்க. . . எழுதுங்க என்று நச்சரித்த என்னுடைய ஸ்நேகிதங்கள்தான் காரணம். தமிழ்நாடு அரசு தொல்பொருள் இலாகாவும், மத்திய தொல்பொருள் இலாகாவும், இராஜராஜசோழனைச் சார்ந்த பல கல்வெட்டுகளையும், பல இடங் களையும் மிக அற்புதமாகப் பராமரித்து வருகின்றசிறப்பும் இந்நாவலை எழுதக் காரணம். "நீங்கள் போன பிறவியில் ராஜராஜனா. . . பிரம்மராயனா. . . ' என்று தொலைபேசியில் உரக்கக் கேள்வி கேட்டு புலம்பலாய்பேசிக்கொண்டிருக்கும் வாசகர்கள் முக்கிய காரணம். "பொன்னியின் செல்வன்'என்ற நாவல் தொடராக எழுதப்பட்டபோது ஏற்படுத்திய போதை, புத்தகமாக வெளிவந்தபோது பல பேர் இல்லங்களில் வாங்கப் பட்டது; வாசிக்கப்பட்டது. அதுபோலவே "உடையா'ரும் பலபேர் இல்லங்களை அலங்கரிக்கும் என்பது நிச்சயம். இது தமிழுக்கும், தமிழர் பெருமைக்கும் நான் அணிவித்த சிறிய மாலை. காவிரிக்கரை தமிழர் நாகரிகத்திற்கு நான் அளித்த மெல்லிலிய பாராட்டுப்பத்திரம்.
பதினாறு வயதில் பெருவுடையார் கோவில் பார்க்குபோது இது ஏதோ அற்புதம் என்ற எண்ணம் மனதில் பதிந்தது. திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. திரும்பத் திரும்பப் பார்த்தது கோவிலைப் பற்றிய விவரங்களைத் தெரிய வைத்தது. அப்படிப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகுஉடையார் ஸ்ரீ இராஜ ராஜத்தேவர் மீது ஈடுபாடு வந்தது. சோழ நாகரிகம் மொத்தமும் எனக்குத் தெரிய வந்தது. அந்த தனி மனிதனும், அவரைச் சுற்றியுள்ளநாகரிகமும், இந்தப் பெருவுடையார் கோவிலும் ஒன்று சேர்ந்து ஒரு கலவையாகிஇதை எழுத வேண்டுமென்ற எண்ணம் முப்பத்தியிரண்டு வயதில் ஏற்பட்டது. முப்பத்தெட்டு வயதில் இதற்கான முயற்சிகளை நான் வேகமாகத் துவங்கினேன். அறுபது வயதில் எழுதி முடித்து விட்டேன்.
இது எப்படி சாத்தியமாயிற்று என்று என்னை நோக்கி வியப்பதை விட, தோளில் பைபோட்டுக் கொண்டு தஞ்சை மாநகருக்குப் போய் பெருவுடையார் கோவிலைப் பாருங்கள். கும்பகோணத் திற்கு நகர்ந்து இராஜராஜன் சம்பந்தப்பட்ட பல இடங்களைத் தேடி கவனியுங்கள். உடையார் குடிக்குப் போய் "துரோகி களான. . . 'என்ற வார்த்தையைத் தடவிப் படியுங்கள்.
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையையும், சோழன் மேட்டையும், குடந்தையிலிலிருந்து தஞ்சாவூர் போகின்ற பெரு வழியையும் கவனித்து வாருங்கள். இதுவே உங்களை இன்னும் இராஜராஜ சோழனுக்கு அருகே கொண்டுபோய் நிற்க வைக்கும். ''
மன்னிக்க வேண்டும்! "உடையா'ரை வாசித்து முடித்த உங்கள் வாசகர்களின் வலைப் பக்கங்களில் உடையாருக்கு வந்திருக்கும் விமர்சனங்களையும் வியப்புகளையும் வாசித்தேனே அன்றி இன்னும் நாவலை வாசிக்க நேரச் சூழல்அமையவில்லை. இந்த நாவலை எவ்வாறாகப் பதிவு செய்ய நினைத்தீர்கள்? அது கைகூடிவந்திருக்கிறதா?
""இதை நான் வெறும் சரித்திர நாவலாக மட்டும் கருதவில்லை. ஒரு இனத்தின்பண்பாட்டு வெளியீடாக, ஒரு நதிக்கரை நாகரிகத்தின் நிறைவான கதையாக,வரலாற்றைக் காட்டிலும் பிரம்மாண்டமான சனாதன தர்மத்தின் ஒரு அலைவீச்சாக,தமிழ் பேசும் எம் குடிமக்கள் எத்தனை அற்புதமான, விஞ்ஞானப்பூர்வமான, அறிவுப்பூர்வமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்றவிதமாகவும் எழுதியிருக்கிறேன்.
உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவர் என்கிற தனி மனிதர் தன்னைப் பற்றி மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளாது, தன்னைச் சேர்ந்த அத்தனை மக்களைப் பற்றியும் அக்கறைப்பட்டு அவர்களையும் இந்த இறைப்பணியில் சேர்த்துக் கொண்டு ஒரு நாகரிகத்தை கல்வெட்டாக விட்டுச்சென்ற கனிவை எண்ணி, அதில் மனம் கரைந்து, அதில் வசப்பட்டு, கதைக்கு நடுவே அந்தக் கனிவைக் காட்டவும் நான் முயற்சித்திருக்கிறேன்.
சரித்திரக் கதையாக இருப்பினும் போர் பற்றிய விமர்சனமும், பெண்கள் பற்றிய பார்வையும், பொழுதுபோக்கு பற்றிய குறிப்புகளும், கடவுள் பற்றிய சிந்தனையும், அது குறித்த தத்துவமும் விவாதமும், என்றைக்கும் எப்போதும் எவரும் புரிந்து கொண்டு மேற்கொண்டு சிந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு இதில் புகுத்தியிருக்கிறேன். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் வாழ்வினுடையஅடிப்படைத் தாகங்கள் அகன்று விடவில்லை. மனிதர்கள் இப்போதும், எப்போதும் ஒரே விதமாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
இந்த நாவலை சோழதேசம் நோக்கிப் பயணப்படுகையில் நான் முடிக்க நேர்ந்தது. ஒரு குவாலிஸ் வண்டியில் நண்பர்கள் அமர்ந்திருக்க தாம்பரத்தில் கதை துவங்கிஇடையறாது இடையறாது ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு வந்தேன். ஒரு கனத்த மழைபோல தங்கு தடையின்றி இந்த நாவல் என்னிலிலிருந்து மிகச்சீராகவெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பயணப்பட்டுக்கொண்டே நாவல் சொல்வதால் அதன்அடர்த்தியும் வேகமும் தெளிவும் அழகும் குறையவே இல்லை. உடன் வந்த என்நண்பர்கள் வியந்து போனார்கள். ஆங்காங்கே நான் உணர்ச்சிவசப்பட என் தலையைத் தடவி, பிடரியை வருடி, தோளைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.
சோழதேசத்தின் எல்லையைத் தொடும்போது உடையார் ஸ்ரீ இராஜராஜத் தேவர் இறைவனடி சேர்ந்தார் என்று சொல்லிலி முடித்து விட்டு, ஒலிநாடாவை பக்கத்தில் வைத்துவிட்டு வெளியே பார்த்து அழத் துவங்கினேன். இன்னும் என்னுள் அந்தநேரம், அந்த நினைப்பு பசுமையாக இருக்கிறது. அருகே ஒருவர் இறந்து விட்டதுபோல, அவர் இறந்த செய்தி ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் எனக்குத் தெரிவிக்கப்பட்டது போல, துக்கத்தோடு நான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்த அந்த மன்னனுக்காக கிட்டதட்ட கதறலாக அழுதேன். அப்பொழுது அப்படி உணர்ச்சிவசப்பட்டது நியாயமாகத் தான் படுகிறது. அந்த அழுகை சரி என்று தான் தோன்றுகிறது.
வெறும் புத்தியால் மட்டும் ஒரு புதினத்தை எழுதிவிட முடியாது. ஒரு கல்வெட்டைப் பார்த்துவிட்டு அதுபற்றிய தகவல் சொல்வது போல் ஒரு கட்டுரையாய் ஒரு புதினம் எழுதப்படக்கூடாது. விமானம் இத்தனை உயரம், இத்தனை அகலம், இத்தனை வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது, இதன் கற்களின் எடை இத்தனை, பிளந்த கற்கள் இவ்வளவு, பிளக்காத கற்கள் இவ்வளவு, உயரே இருக்கின்ற கலசத்தின் எடை இவ்வளவு, சுற்றியுள்ள மதில் சுவரின் அளவு இத்தகையது, இவர்தான் மூலவர், எல்லாரும் சாமி கும்பிட்டுக்கோங்க, சீக்கிரம் வெளியேவாங்க என்று ஒரு வழிகாட்டியைப் போல ஒரு எழுத்தாளன் செயல்பட முடியாது.
அந்தக் கட்டிடத்திற்கு அருகே போய் அண்ணாந்து பார்த்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இதை எப்படிக் கட்டினார்கள், அவர் களெல்லாம் யார், என்ன கணக்கு, என்ன கருவி என்று எவர் வியக்கிறாரோ, நம்முடைய முன்னோர் எத்தனை நேர்த்தியாக இதைச் செய்திருக்கிறார்கள்என்று எவர் பெருமிதப்படுகிறாரோ, இதைச் செய்கின்ற ஆற்றல் இருக்குமென்றால்அவர்களுக்கு இன்னும் என்னென்ன ஆற்றல் இருந்திருக்க வேண்டும், அந்த ஆற்றல் உள்ளவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும், அவர்கள் எவ்விதமாகக் குடித்தனம் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து யோசிக்கிறார்களோ அப்படி உணர்ச்சிவசப் பட்டவர்களுக்கு உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டது இந்த நாவல். ''
வரலாற்று மிகுபுனைவாக ஒரு நெடும் நாவலைப் படைக்கிறபோது அதற்காகத் திரட்டப்படும் தரவுகளின் நம்பகத் தன்மையும், கண்கூடாக இன்று எஞ்சியிருக்கும் வரலாற்று மிச்சங்களைப் பொருள் கொள்வதிலும் உங்கள் உழைப்பு எத்தகையது?
""இந்தக் கேள்விக்காக உங்களுக்கு என் நன்றி. உடையார் ஸ்ரீ இராஜராஜத் தேவர் எப்படியிருப்பார்? கருப்பா, சிவப்பா, குட்டையா, நெட்டையா, ஒல்லியா என்றுயாருக்கும் தெரியாது. சில சித்திரங்களும், சில சிலைகளும் அவர் இவ்விதமாகஇருப்பார் என்று காட்டுகின்றன. அந்தச் சிலைகளிலிலிருந்து அவர் நிறமும் நடையும் உடையும் பாவனையும் வெளிவந்துவிடாது. படம் வெறும் அடையாளமாகத்தான் இருக்கும். அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு அதை என்னுள் தேக்கி அவர் இப்படி இருந்திருக்கக் கூடும் என்று நான் எழுதியிருக்கிறேன். அவருடைய மனைவிகள் இத்தனை பேர் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இது சொல்லப்பட்டிருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அதில் எவள் முக்கியமானவளாக இருந்திருப்பாள் என்று பல்வேறு காரணங்களை முன்வைத்து ஒரு யூகம்செய்திருக்கிறேன்.
பட்ட மகிஷிக்கோ, ராஜேந்திர சோழனைப் பெற்ற தாயார் வானதிக்கோ பள்ளிப்படை கோவில் இல்லை. ஆனால் பஞ்சவன் மாதேவி என்கிற பெண்மணிக்கு பள்ளிப்படை கோவில் இருந்திருக் கிறது. அதுவும் இராஜராஜ சோழனுடைய மகன் இராஜேந்திர சோழனால்கட்டப்பட்டிருக்கிறது. தந்தையினுடைய அனுக்கிக்கு கோவில் எழுப்புகிறஅரசனின் செயலை உற்றுப் பார்க்கிறபோது அவள் அற்புதமான பெண்மணியாய் இருந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பட்ட மகிஷிக்கு, வானவன்மாதேவிக்கு பள்ளிப்படை இருந்திருக்கலாம். சிதிலமாகியிருக்கலாம். பஞ்சவன்மாதேவி கோவிலும் கண்ணெதிரே இடிபட இருந்தது. யார் செய்த புண்ணி யமோ, அதைஇந்து அறநிலையத் துறை மறுபடியும் தூக்கிக் கட்டி இருக்கிறது.
மாதேவடிகள் என்று இராஜராஜ சோழனின் மகள் ஒருத்தி கட்டிய கோவில் சிதிலமான நிலையில் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானா லும் அது தரையோடு தரையாகமாறும். அதைக் காப்பாற்ற இன்னும் வேளை வரவில்லை. இந்த தமிழ்தேசத்தின் பல்வேறு சாபங்களில் இதுவும் ஒன்று. நம் பழம்பெருமைகளை போற்றிப்பாதுகாக்காதது- போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது பெருங்குறை.
கவிதை என்றால் சினிமாப் பாட்டு, ஓவியம் என்றால் வாரப் பத்திரிகை, இலக்கியம் என்றால் வேண்டாத விஷயம். தியாகிகள் என்றால் கட்சித் தலைவர்கள் என்று மிகவும் சுருங்கிப்போன இந்த மக்களிடையே தமிழர்களின் பழம் பெருமையைக் கொஞ்சம் உரத்துக் கூறித்தான் ஞாபகப்படுத்த வேண்டும். கொஞ்சம் அலங்காரமாகப் பேசித்தான் தமிழ் உணர்வு ஊட்ட வேண்டும். ஹிந்தியை அழிப்பதால் தமிழ் வாழ்ந்து விடாது. தமிழைப் போற்றுவதால்தான் தமிழ் வாழும் என்பதைஅவர்களுக்கு லேசாய் இடித்துரைக்க வேண்டும்.
ஆங்கிலப் படிப்பு மட்டுமே மேன்மையன்று. அதில் பேசுவதால் மட்டுமே ஞானம்வந்து விடாது. நம்முடைய தாய்மொழியான தமிழில் நுணுக்கங்கள் நிறைந்த பல்வேறுவிஷயங்கள் இருக்கின்றன. மனித உணர்வுகளை மிகத் துல்லிலியமாகக் காட்டுகின்றஅற்புதமான கவிதைகள் இருக்கின்றன. இப்படியும் யோசிக்க முடியுமா மனிதர்களால் என்று இன்றைக்கும் வியக்க வைக்கின்ற காவியங்கள் இருக்கின்றன. திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டதால் திருக்குறளுக்கு தமிழ் மக்களி டையே ஒரு மேன்மைவந்திருக்கிறது. ஆனால் ஸ்நேகம் வந்திருக்கிறதா? எனக்குச் சந்தேகமே. திருக்குறள் முக்கியமானதென்று தலையில்வைத்துக்கொண்டு கூத்தாடுகிறார்கள். நெஞ்சுக்குள் இறக்கிக் கொள்கிறார்களா? கேள்விக்குறியே.
எனவே, தமிழ் மொழியின் தொன்மை மக்களுக்குத் தெரியாமல் போனதுபோல இந்தத்தமிழ் நாகரிகத்தினுடைய தொன்மை, பரப்பளவு, கனம் தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக, இவளை உணர்ச்சிப்பூர்வமாக நான் அணுகி இந்தச் சோழ தேசத்து வரலாற்றைச் சொல்லியிருக்கிறேன்.
காதுகள் உள்ளோர் கேட்கக்கடவர். இதற்கொரு காது வேண்டி இருக்கிறது. இதற்கொருவிதமான சிந்தனை வேண்டியிருக்கிறது. இதற்கொரு விதமான தாகம் வேண்டியிருக்கிறது. இதற்கொரு தவிப்பு வேண்டியிருக்கிறது. இது எல்லாருக்கும் இருக்குமென்று நாம் எதிர் பார்க்க முடியாது. இருக்கின்ற சிலபேருக்கு எளிதாக்கி அரைத்துக் குடிப்பதற்குக் கொடுக்க வேண்டுமல்லவா?அந்தச் செயலை நான் செய்திருக்கிறேன்.
தமிழ் நாகரிகத்தின் மேன்மையை ஒரு ஐரோப்பியர் பாழடைந்த கோவில்களுக்குள் ஏறி, உதவியாளர்களோடு கற்களின்மீது சுண்ணாம்பு தடவிப் படித்து, படித்ததை எழுதி, மிகப் பெரிய குறிப்புகளாகச் செய்து வைத்திருக்கிறார். திரு. ஹுல்ஷ்எ ன்ற அந்த பிரிட்டானியப் பெருமகனுக்குத் தமிழ்தேசம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு திரு. நீலகண்ட சாஸ்திரியிலிருந்து இன்றுமிகச்சிறப்பாகத் தனிமனிதனாக சரித்திர ஆராய்ச்சி செய்துவரும் டாக்டர் கலைகோவன் வரை, திரு. சதாசிவப் பண்டாரத்தாரிலிலிருந்து, அரசாங்க உத்தியோகஸ்தராக இருப்பினும் அதைத் தாண்டி சோழ தேசத்தின்மீது மாறாக் காதல் கொண்ட டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் வரை பல்வேறு நண்பர்களுடைய கடும்உழைப்பை நான் உள்வாங்கிக் கொண்டு என் வாசகர்களுக்குப் புரியும் வண்ணம்தேன் குழைத்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் எழுதிய கட்டுரை களைத்திரும்பத் திரும்பப் படித்தபோது தேன் சுவை போதையில் நான் பல வருடங்கள்திளைத்திருந்தேன்.
கட்டுரைகள் கொடுத்த போதையோடு நான் நேரே சென்று இந்த பெரிய கோவில் என்கிற கவினுறு பொக்கிஷத்தைப் பார்க்கும்போது இன்னும் வசமிழந்தேன். ஒருமுறையா, இருமுறையா- முப்பது வருடங்களுக்கு மேல் எத்தனையோ முறை இந்தக் கோவிலைவிதம் விதமாக சுற்றிப் பார்த்திருக்கிறேன். கல்வெட்டுக்களைத் தடவித் தேம்பியிருக்கிறேன். உற்சாகத்தில் குதித்திருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களை அழைத்து வந்து பார், இதைப் பார், அதைப் பார், அங்கே பார், இங்கேபார் என்று கூவலாய் பேசியிருக்கிறேன்.
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவிலுக்குப்போய், இருண்டு பாழடைந்து கிடந்த இடத்தை நீரும் துடைப்பமும் கேட்டு வாங்கி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அழுக்குகளை அகற்றி, அவள் நினைவாக ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அபிஷேகப் பொடி தூவி, கழுவி, பால் ஊற்றிசமனம் செய்து, விபூதி கொட்டி மணக்க வைத்து, நெய் விளக்குகள் ஏற்றி வைத்து,ஒரு வெண்கல விளக்கு, ஒரு கண்ணாடி விளக்கு பொருத்தி வைத்து, ஐந்நூறு ரூபாய் புடவை சார்த்தி, பூபோட்டு, தேவாரப் பதிகம் பாடியிருக்கிறேன். "மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே. . . ' என்று கண்ணில் நீர் கசிய, இந்த இடம் நல்லபடி மிளிர வேண்டுமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். கட்டிடக் கலைஞர் நண்பர் திரு. சுந்தர் பரத்வாஜோடும், ஜோதிடர் கே. பி. வித்யாதரனோடும் ராஜராஜன் கால்பட்ட இடங்களெல்லாம் எவை என்று பல்வேறு முறை பயணம் செய்திருக்கிறேன்.
பெருவுடையார் கோவில் உள்ளுக்குள் இருக்கின்ற ஓவியங்களையும் சிற்பங்களையும் நாற்பது ஐம்பது முறைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். காரில் பயணப்பட்டால் தூரம் தெரியவில்லை என்று, ஸ்கூட்டர் கடன் வாங்கி குதிரையில் பயணப்படுவதுபோல் தஞ்சையிலிருந்து பல்வேறு இடங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறேன். குடந்தை, தஞ்சை பெருஞ் சாலையை பல இடங்களில் நடந்தே கடந்திருக்கிறேன்.
மிக உக்கிரமான நிசும்பசூதனி சிலையையும், சில காளி கோவில் சிலை களையும்அருகே நின்று தொட்டுத் தடவிப் பார்த்திருக்கிறேன். அந்நேரங்களில் அந்தக்கோவில் சம்பந்தப்பட்டவர்களே கருவறைக்குள் அழைத்து நெருக்கமாய் நின்றுதரிசனம் செய்யச் சொல்லிலியிருக்கிறார்கள்.
வாசகர்களுக்கு இவர்கள் உண்மையா, இது கற்பனையா என்று ஒரு புதினத்துக்குப்பிறகு கேள்விகள் வருவது இயற்கை. நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது விழுக்காடுஇதிலுள்ள பெயர்கள் உண்மை யானவை. பல சம்பவங்கள் உண்மையானவை. கல்வெட்டுஆதாரமுள்ள சம்பவங்கள். என்னுடைய கற்பனையும் இதில் கலந்திருக்கிறது.
பஞ்சவன் மாதேவி எப்படி இறந்தாள் என்று யாருக்கும் தெரியாது. அவள் இறந்தவிதம் என் கற்பனை. ஆனால் அவளுக்காக பள்ளிப் படைக் கோவில் இராஜேந்திர சோழன் எழுப்பியது என்பது சரித்திரம்.
இராஜராஜ பாண்டிய ஆபத்துதவிகளான சேரதேசத்து நம்பூதிரிகள் தேடிக் கொலை செய்யமுயற்சிக்கிறார்கள் என்பது என் கற்பனை. ஆனால் மாதேவடிகள் ஸ்ரீ இராஜராஜ சோழனின் மகள் என்பதும் நடுவிற் பெண்பிள்ளை என்பதும், அவள் புத்த மதத்தைச் சார்ந்தவளாக இருந்திருக்கக்கூடும் என்பதும் சரித்திரம்.
பாறைகள் வெட்டப்பட்ட இடம், கொண்டுவரப்பட்ட விதம் யூகம் தான். வேறு எப்படியும் இது இருந்திருக்காது என்பதுதான் அந்த யூகத்தின் அடிப்படை. சாரப் பள்ளத்திலிலிருந்து சாரம் கட்டி இத்தனை உயரம் கல்ஏற்றியிருக்கிறார்கள் என்பது சிறிதளவுகூட நம்ப முடியாத ஒரு செய்தி. தஞ்சையில் வாழும் திரு. இராஜேந்திரர் என்ற பொறியியல் வல்லுனரின்கூற்றுப்படி, இது ஸ்பைரல் சாரமாக, வளைந்து வளைந்து போகும் பாதையாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பது ஒரு யூகம். அந்த மண் கொண்டுபோய் கொட்டப்பட்ட இடமும், ஒரு சிறு குன்றென அது நிற்கும் விதமும் இன்னமும் இருக்கின்றன.
அருண்மொழிப்பட்டனும் சீருடையாளும் சாவூர் பரஞ்சோதியும், வீணை ஆதிச்சனும் கோவிந்தனும் நிஜம். . கண்டன்காரியும் காரிக் குளிப்பாகையும் நிஜம். நித்தவினோதப் பெருந்தச்சன், குணவன் நிஜம். குஞ்சரமல்ல பெருந்தச்சர் நிஜம். ஆனால் பரத நாட்டியச் சிற்பங்களுக்கு பஞ்சவன்மாதேவிதான் ஆதாரமாக இருந்தாள் என்பது என் கற்பனை. நாவலுக்காகக் கொடுக்கப்பட்ட சுவை.
இருநூற்று முப்பத்தேழு நாவல்கள் நான் எழுதியதனுடைய அடிப்படைக் காரணமே இதை எழுதத்தான். மற்ற நாவல்கள் அத்தனையும் "உடையார்' எழுதுவதற்குண்டான பயிற்சிதான். ஏதேதோ செய்து, எங்கெங்கோ அலைந்து, எதை எதையோ முக்கியம் என்று கருதி சிதறி சின்னாபின்னப்பட்டு, பிறகு மறுபடியும் ஒன்று கூடி இப்படி ஆறுபாகத்திற்கு ஒரு புதினம் எழுத முடிந்திருக்கிறதென்றால் அது குருவருளன்றிவேறில்லை. ''
முன்பு போல் இப்போது அதிகம் எழுதுவதில்லை இல்லையா?
"ஒரு ஓய்வு போலவும், ஒரு இடைவெளி வேண்டும் என்ற நினைப் பாலும் நான் எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறேன். நான் வெறும் அரட்டைக்காரன் அல்ல. நான் உழைப்பதற்கு அஞ்சியதே இல்லை. நான்கு மணி நேரத் தூக்கம். வாரத்தில் ஏழு நாட்களும் வேலை என்று இடையறாது உழைத்துக் கொண்டிருந்தவன் நான். இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகும் இருபத்தியேழு நாட்களில் எழுந்து உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன். மிக உற்சாகமாக வேலை செய்வதும் வேலையின்மீது காதலோடு இருப்பதும் எனக்குப் பிடித்த விஷயங்கள்.
"உடையா'ரை எழுதி முடித்து விட்டு அது கொடுத்த அயர்ச்சியில் சற்று அமைதியாக இருக்கிறேன். ஆனாலும் மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையைப் பற்றியும், இராஜேந்திர சோழனைப் பற்றியும் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் தொடர்ந்து எழுதுவேன். எழுதிக் குவிக்கின்ற எண்ணம் மட்டுப்பட்டிருக்கிறது. உடல் நலமும் அதற்குக் காரணம். நோய் என்று ஏதும் இல்லை. ஆனாலும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியமாக இருக்கிறது. உடம்பு தூக்கம் வேண்டும் என்று கேட்கிறது. அதனால் உடம்போடு இயைந்து ஒத்துழைத்து அதன் சொல்கேட்டு அதற்கு ஏற்றபடி என் வேலை நேரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உற்பத்திக் குறைவு-அவ்வளவே. இன்னும் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனாலும் என்ன வரும் என்று சத்தியமாகச் சொல்ல முடியவில்லை. குதிரை கவிதைகள் மட்டுமல்ல, அடி ஆழத்தில் இருக் கின்ற கடவுள் தேடலைக் கவிதை ஆக்குகின்ற ஒருஎண்ணம் இருக்கிறது. நான் உணர்ந்த கனத்த, இருண்ட, அடர்த்தியான ஒரு தனிமையை கவிதை ஆக்க முயற்சிக்கவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இது தமிழுக்குப் புதிதாக இருக்கக்கூடும். ''
-நன்றி - நக்கீரன்
This entry was posted on 08:20 and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On October 30, 2011 at 6:44 PM , Sivamjothi said...

Hi

I'm great fan of BALA sir. He was stepping stone in my life. His books are amazing.
Changed my life.

Please send the below message to BALA sir.


திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

 
On February 14, 2015 at 12:49 PM , சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன் said...

Dear bala sir
You are my spiritual guide and guru. You have been moulding me .whenever depress my mind,your novel encouraged and improved selfconfidence..you are indulged me to do the medidation. Now I am doing medidation. Now I am astrologer and teacher

 
On January 20, 2016 at 9:42 PM , SaiShyamSai said...


எழுத்து ஒரு தந்திரம். இசை ஒரு தந்திரம். சினிமா ஒரு தந்திரம். எல்லா கலைகளுக்குப் பின்னாலும் தந்திரம் இருக்கிறது. தந்திரமற்ற வாழ்க்கை இருக்குமோ என்று யோசித்தேன். சந்தேகமற்று மற்றவர்களை நம்பினால் என்ன ஆகும்என்று சோதனை செய்து பார்த்தேன்.
என்னை வந்து சந்தித்தவர்களை முழுவதும் நம்பினேன். முகத்தில் குத்துவிழுந்தபோதும் நம்பினேன். உள்ளே அமைதியாக இருந்து, மற்ற வாழ்க்கையின் தந்திரங்களை, மற்ற மனிதர்களின் ஆசாபாசங்களை உற்றுப் பார்க்க, எழுத நிறைய கிடைத்தது. எழுத எழுத மனம் பக்குவப் பட்டது.

Read, re-read... and again i will read.. Guruve saranam...

Unns sirithu unavu, iruka idam.. and padika idu pol niraya eluthukal